கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சாட்டை! தடிமனான சாட்டையை தவிர்த்து பருத்தி சாட்டையால் அடித்து கொண்டதாக விமர்சனம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து கொண்ட சம்பவத்தில் கடைசி நேரத்தில் சாட்டை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து இன்று சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனையடுத்து கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவர் அடித்துக்கொள்ளவிருந்த சாட்டை கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. முதலில் மாரியம்மன் கோயிலில் இருந்து தேங்காய் நாரினால் செய்யப்பட்ட தடிமனான சாட்டை கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர், சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பருத்தியாலான சற்று லேசான சாட்டையால் அடித்துக்கொண்டார்.