மார்கழி முழுவதும் திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ் கடவுள் ஆன முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட மாத காலங்களில் மட்டும் காலையில் கோவில் நடைதிறப்பு மற்றும் பூஜை கால நேரங்கள் மாறுபடும். இந்த நிலையில் வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் கோவில் நடை திறப்பு குறித்து கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மார்கழி ஒன்றாம் தேதியான டிசம்பர் 16ஆம் தேதி முதல் மார்கழி 30 ஆம் தேதியான ஜனவரி 14ஆம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 4.45 மணிக்கு மேல் 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனையும், காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனையும், காலை 6 மணிக்கு மேல் கால சந்தி தீபாராதனையும், 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடைபெற உள்ளது. மேலும் மாலை 3.30 மணிக்கு சாயரட்சையும், 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், 7 மணிக்கு ராக்கால தீபாராதனையும், 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை திருக்காப்பிடுதல் பள்ளியறை தீபாராதனை நடைபெறுகிறது.
இதில் டிசம்பர் 17ஆம் தேதி மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பகல் 2.30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெற உள்ளது. மார்கழி மாதம் 17 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி மார்கழி மாதம் 19ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.


