சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு? - புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் என்றாலே அரசியல் கட்சியின் வரலாற்றுக்கு என ஒரு தனி பெரும் பெயர் பெற்ற ஊராகும். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டினையும் சேலத்தில் நடத்துவது தொடர்பாக இடம் தேர்வு செய்யும் ஆய்வு நேற்று நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சேலம் , ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்ய ஆய்வு பேற்கொண்டனர்.
சேலம் என்றாலே தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக விளங்கி வருகிறது. 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியில் இருந்து திராவிட கழகம் சேலத்தில் தான் உதயமானது. அதேபோல ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் சந்தித்து கொண்ட இடமும் சேலம் என்றே கூறலாம். எனவே திராவிட இயக்கம் வளர ஒரு முக்கிய களமாக சேலம் இருந்தது. அந்த வகையில் நடிகரும் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் தலைமையில் அக்கட்சியின் முதலாவது மாநில மாநாடு சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் நேற்று சேலம் வந்து தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தார்.
குறிப்பாக சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் ஏற்கனவே அதிமுக, தேமுதிக மற்றும் பாஜாக சார்பில் மாநாடு நடத்தப்பட்ட தனியாருக்கு சொந்தமான இடத்தினை பார்வையிட்டார். பின்னர் ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில் இரண்டு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதாவது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாட்டினை , அரசியல் வரலாற்றுக்கு வழிவகுக்கும் சேலத்தில் நடத்த திட்டமிட்டு மாநாட்டுக்கான இடத்தினை தேர்வு செய்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் செப்டம்பர் சேலத்தில் நடைபெற உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாவது மாநில மாநாடு நடத்துவது குறித்து இடம் பார்க்கும் பணி நேற்றைய தினம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக வருகை தந்து இடத்தை ஆய்வு செய்தார். அப்பொழுது சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.