விளக்கு பிடிக்கும் கலாச்சாரம்தான் இந்திய கலாச்சாராம் - பாடகி சின்மயி ஆவேசம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜகோபாலன், சிவசங்கர் பாபா உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் சிக்கி இருக்கிறார். இவரால் ஒரு மாணவி உயிரிழந்திருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பாடகி சின்மயி தனது கருத்தினை வீடியோ மூலமாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், பாதிக்கப்படும் மாணவிகள் பெற்றோர்களிடம் சொல்லும்போது அவர்கள் இதை வெளியில் செல்வதை தவிர்க்கின்றனர். அப்படியே வெளியில் சொன்னால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் என்று அவர்களிடம் உள்ள மனநிலையே அதற்குக் காரணம்.
அப்போது இந்த மாணவியின் மனநிலையை உணர்ந்து பெற்றோர்கள் குரல் கொடுத்திருந்தால் இந்த மாணவியை காப்பாற்றி இருக்க முடியும். இந்த சமுதாயம் தான் காரணம். அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை தலைமை ஆசிரியையிடம் சொல்லியும் அதற்கு அந்த தலைமை ஆசிரியை பேருந்தில் யாரோ இடித்தது போல எடுத்துக்கொள் என்று அந்த மாணவிக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்.
நான் கேட்கிறேன் பேருந்தில் பெண்களை இடித்தால் அது தவறு இல்லையா. இதெல்லாம் ஒரு சாதாரணமான விஷயம் என்பது போலத்தான் இந்த சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல அந்த ஆசிரியரின் மனைவியிடம் அந்த மாணவி சொல்லியும் அவர் இதை வெளியில் சொன்னால் உனக்குதான் அசிங்கம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார். இதனால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதேபோல பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெளியில் வந்து தனக்கு பாலியல் சீண்டல் நடைபெற்று இருக்கிறது என்று சொன்னால் அதை கேலியும் கிண்டலும் செய்து அந்தப் பெண்ணை காயப்படுத்தும் சமுதாயமாக இந்த சமுதாயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், குழந்தைகளுக்கு தயவுசெய்து பாலியல் கல்வியை கற்றுக் கொடுங்கள். அது மிகவும் அவசியம். இதையெல்லாம் தெரிந்து கொள்வது நமது கலாச்சாரத்திற்கு அவமானம் என்றெல்லாம் சொல்லாதீர்கள். நான் சொல்கிறேன் இந்த சமுதாயம் பாதிக்கப்பட்ட பெண்களை காயப்படுத்தும் சமுதாயம் . பாலியல் கல்வியை படிப்பதால் நமது கலாச்சாரம் சீரழிந்து விடாது. ஒரு பெண்ணை யாராவது பாலியல் சீண்டல் செய்து விட்டாலும் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டாலும் அதை வெளியில் சொன்னால் அது அவர்களுக்குத் தான் அசிங்கம் என்ற தவறான எண்ணத்தை கொண்ட சமுதாயமாக இருக்கிறது இந்த சமுதாயம் .
பாலியல் கல்வி என்பது அவசியம் கலாச்சாரத்திற்கு எந்த பாதிப்பு வந்துவிடாது. கலாச்சாரம் நன்றாகத்தான் இருக்கும். இந்திய கலாச்சாரம் என்றெல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கற்பழிப்பவர்கள், பாலியல் செயலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு சுரண்டுபவர்களுக்குக் விளக்கு பிடிக்கும் கலாச்சாரம்தான் நமது இந்திய கலாச்சாரம் என்றுதான் நான் சொல்லுவேன். இதை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லுவேன். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார் பாடகி சின்மயி.