பட்டாசு ஆலை வெடி விபத்து - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!
பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின. தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இருந்த அறையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர். வெடி விபத்து தொடர்பாக போர்மேன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளதை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.