டிசம்பர் 1ஆம் தேதிக்குள் சென்னையில் மிக பலத்த மழை : எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்

 
pradeep

 டிசம்பர் 1ம் தேதிக்குள் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் பரவலாக கனமழை பெய்தது.  குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ள நீர் சூழ்ந்தது.  தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெயில் எட்டி பார்க்க துவங்கியுள்ள நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

rain

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் இதன் காரணமாக தமிழகம் ,கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் வருகின்ற 27ம் தேதி முதல் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இரவில் இருந்து அதிகாலை வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில நாட்களில் பகலிலும் பலத்த மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 2017 நவம்பர் முதலாவது வாரம் பெய்த மழை நினைவிருக்கிறதா என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு பீதியை கிளப்பியுள்ளார்.