பிரபல கடை பிரியாணியில் பூச்சி... டேபிளுக்கு கீழே போய் மேலே வந்த தட்டு!
பிரியாணிக்குள் பூச்சி விழுந்தது என்று புருடா விட்ட வாடிக்கையாளர் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார்.
கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில், எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில், டிசம்பர் 30ம் தேதி மதியம் வாலிவர் ஒருவர் சாப்பிட சென்றிருக்கின்றார். சிக்கன் பிரியானி ஆர்டர் செய்த அந்த நபர் மற்றும் அவருடன் வந்த பெண் இருவரும் உணவை சாப்பிட்டிருக்கின்றனர். உணவு சாப்பிடும்போது அதில் பூச்சி இருந்ததாக சர்வரிடம் முறையிட்டு சண்டையிட்டிருக்கின்றார். அதனை அவர் அலைபேசியில் பதிவு செய்திருக்கின்றார். பின்னர் அவர் தனது instagram பக்கத்தில் அதனை வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த நிலையில் உணவக பணியாளர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கின்றனர் . அதில், அந்த வாடிக்கையாளர் உணவு சாப்பிட்டுவிட்டு, அருகாமையில் அமர்ந்திருந்த பெண்ணுடன் பேசுகிறார். பின்னர், சிறிது நேரம் மேஜைக்கு அடியில் பிரியாணி தட்டை வைத்து விட்டு, அந்த தட்டை மேஜை மீது வைக்கின்றார். இருவர் கைகளை மேஜை அடியில் வைத்த ஏதோ பேசிவிட்டு, தட்டை டைனிங் டேபிளில் வைப்பது, பிறகு செல்ஃபோனில் படம் பிடிப்பது போன்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து பேசிய ஹோட்டல் பணியாளர்கள், அந்த நபர் அவராகவே பூச்சியை எடுத்து பிரியாணி தட்டில் போட்டு, திட்டமிட்டு அவதூறு பரப்பியிருப்பதாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். போலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு பிரியாணி இலையை பீடித்துண்டு என நினைத்து மதுபோலையில் ஒரு வாலிபர் பிரச்சனை செய்ததாகவும், பின்னர் அது பிரியாணி இலை என தெரிந்தது, போலீசில் மன்னிப்பு கடிதம் எழுதி வந்து விட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.