பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை - 2 மருத்துவர்கள் கைது!
பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றிவந்த 2 பெண் மருத்துவர்களுக்கு, உடனிருந்த ஆண் மருத்துவர்கள் இருவர், பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ,மருத்துவர்கள் வெற்றி செல்வன் மற்றும் மோகன் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை உள்ளதா என மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர்களும் , இயக்குனர்களும் , நேரடியாக சென்று புகார் வந்தால் , உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில் இரண்டு மருத்துவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பணிக்காக தனியார் விடுதிகளில் தங்கி உள்ள பெண் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு உள்ளதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இயக்குனர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.