“நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வி அடைவார்”- செங்கோட்டையன்
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் டெபாசிட் இழப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முழுவதும் அதிமுகவிற்காகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அதிமுகவில் இணைந்தால்கூட நன்றாக இருக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் எத்தனை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார் என்பது எனக்கு தெரியும். அவர் இன்றைக்கு எங்களைப் பார்த்து சவால் விடுகிறார். ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்கிறார். நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் எங்கு போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக கூறுகிறோம். அவர் எங்கு நிற்கலாம் என தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நிக்கச் சொல்லுங்கள். வேறு தொகுதியை தேடிக் கொண்டிருக்கிறார். இளைய தளபதி விஜய் அவர்கள் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்பார். வெற்றி பெறுவார். ஈரோட்டில் நடைபெற உள்ள கூட்டத்தில், பல கட்சிகளில் இருந்து, சாரை சாரையாக வந்து, எங்கள் கட்சியில் சேரப் போகிறார்கள். இதை அனைவரும் கண்கூடாக பார்க்கப் போகிறார்கள்” என்றார்.


