பெரியார் குறித்த சீமானின் கருத்து பதற்றத்தை உருவாக்கும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 
அ

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.  அதில், "நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் நேற்று(09/01/25) செய்தியாளர் சந்திப்பில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் கல்வி அறிவில் முன்னேற்றத்திற்காகவும் பெரும் பாடுபட்டவர் தந்தை பெரியார். ஆனால் பெண்கள் மத்தியில் தந்தை பெரியார் குறித்து தவறான கருத்துக்களை திணிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அடிப்படை ஆதாரம் இன்றி சீமான் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதால், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஆகவே சீமான் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே எனது புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மகேந்திர பதி,பதுருஸ் ஜமான் ஆகியோர் தந்தை பெரியார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்கள் உரிமை பெண் கல்வி என பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பாடு பட்ட தந்தை பெரியாரை பற்றி அவதூறான கருத்துக்களை சீமான் பேசி வருகிறார் இவர் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.

இதை பதிவு செய்த நீதிபதி, சீமான் தெரிவித்த உள்ள கருத்துக்கள் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளது, எனவே இந்த விவாகரத்தில் மதுரை அண்ணா நகர் காவல் துறை மனுதாரரின் புகார் மனுவை பெற்று  நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 20 தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.