வெளிநாட்டு கைதிகளின் நலன்களுக்கு விதிகளை வகுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

 
court

சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறைக்கைதிகளின் நலன் காக்க தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் , இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நைஜீரியாவைச் சேர்ந்த எக்விம் கிங்ஸ்லி தாக்கல் செய்திருந்த மனுவில், “புழல் சிறையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே வெளிநாட்டு கைதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கும், சிறைத் துறை நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

high court
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, “தமிழக சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படும் நிலையில் கடந்த டிசம்பர் முதல் வெளிநாட்டு கைதிகள் அவர்களது குடும்பத்துடன் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மனுதாரர் உள்ளிட்ட 75 வெளிநாட்டு கைதிகள் சிறைகளில் அடித்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று வாதிட்டார்.

 
சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், “சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் எந்த பாகுபாடுமின்றி தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிறைகளில் உள்ள இந்திய கைதிகளைப் போல வெளிநாட்டு கைதிகளின் நலன் தொடர்பாக எந்த விதிகளும் இல்லை. இதனால் அவர்களுக்கான திட்டங்களை முறையாக செயல்படுத்த முடிவதில்லை. இதுதொடர்பாக தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் மத்திய உள்துறை செயலரையும் எதிர்மனுதாரராக சேர்த்தனர். இந்தியா முழுவதும் பிற மாநில சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிமுறைகள் எதுவும் உள்ளதா என்பது குறித்தும், அப்படி இருந்தால் அதை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.