சிலிண்டர் வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின்

 
சிலிண்டர் வெடித்து விபத்து

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சேலம்: எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து; தரைமட்டமான 3 வீடுகள் | Dinamazhai
சிலிண்டர் வாயு கசிந்ததின் காரணமாக ஏற்பட்ட  விபத்தில் சேலம் மாநகராட்சி 57வது கோட்டத்திற்குட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள நான்கு வீடுகள் தரைமட்டமாகின.  இதில் குடியிருந்து வந்த மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் முதலில்  உயிரிழந்தார். இதனையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 13 பேரை அடுத்தடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு,  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதில் ராஜலட்சுமியின் மருமகன் கோபி,  90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.  மற்றவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் 7 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த பத்மநாபன் மற்றும் அவருடைய மனைவி தேவியின் உடல்களை மீட்டனர்.  அதனை தொடர்ந்து கார்த்திக் ராம் என்ற இளைஞரின்  உடலை மீட்டனர். பின்னர் ராஜலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்த அவருடைய நாத்தனார் எல்லம்மாள் உடலை மீட்டனர். இதனால் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.