ராஜேந்திரபாலாஜி மீது மோசடி, கொலை முயற்சி புகார்கள் உள்ளன; அவர் தொடர் குற்றவாளி- காவல்துறை

 
rajendra balaji

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீது அரசு வேலை வாங்கி மோசடி செய்தது மட்டும் அல்லமால், கொலை முயற்சி குற்றச்சாட்டும் இருப்பதாகவும் அவர் ஒரு தொடர் குற்றவாளி என்றும் தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

rab

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி  ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வேலைக்காக பணம் வாங்கியது தவிர, கொலை திட்டத்திலும் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் ஒரு தொடர் குற்றவாளி என்றும் தெரிவித்தார். இரு வழக்கிலும் முன் ஜஈமீன் வழங்கக்கூடாது என புகார்தாரர்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய இருப்பதால், அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி புகார் அளித்த விஜய் நல்லத்தம்பியின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும், காவல்துறை உரிய நோட்டீஸ் வழங்காமல், கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அரசியல் உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.