எந்த தொழிலிலும் செய்யாமல் 6-வது பணக்கார முதலமைச்சரானது எப்படி?- நாராயணசாமி நச் கேள்வி
இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் 6-வது பணக்கார முதலமைச்சர் ரங்கசாமி என மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவர் எந்த தொழிலும் செய்யவில்லை அப்படி இருக்க எப்படி பணக்கார முதலமைச்சராக வந்தார்? என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “அம்பேத்கர் குறித்து பேசிய அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ்காட் பக்கத்தில் மன்மோகன் சிங்கின் பூத உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை, கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர்களுக்கு அங்கு அடக்கம் செய்யப்பட்டனர். புதுச்சேரி அரசு முதுகெலும்பு இல்லாத அரசு. பாஜகவின் கைகூலியாக செயல்படும் அரசு. பள்ளி படிக்கும் காலத்தில் சிறு பிள்ளைகள் மீது பெரிய சுமையை சுமத்தி 5 முதல் 8 வரை பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறுவதால் அவர்கள் இடைநிற்றலை அதிகமாக்கும். நிதி பற்றாக்குறை என கூறி பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் சாதாரன ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி குறைக்கவில்லை என்றால் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துவோம். முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு முதலமைச்சரே தவிற செயல்படுத்துகின்ற முதலமைச்சர் இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து சவுக்கை அடி போராட்டம் நடத்தியுள்ளார். அண்ணாமலை சரித்திரத்தை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் பெண்கள் பாலியல், பெண்கள் நிர்வாணமாக்குதல் போன்ற வன்கொடுமைகள் அங்கு பூதாகரமாக தலைவிரித்து ஆடுகிறது. அங்கு பாஜக ஆட்சிதான் நடக்கிறது. அங்கு அண்ணாமலை சென்று சவுக்கை அடி அடித்துகொள்வாரா? மேலும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தல், காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
பாஜக மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் பெண்களுக்கு பாஜக ஆதரவாக பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். பாஜகவுக்கு பெண்களை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை. பாஜகவினர் மேல் தான் பாலியல் பலாத்கார வழக்கு அதிகம் உள்ளது. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என நாடகத்தை தமிழகத்தில் பாஜக அரங்கேற்ற வேண்டாம். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் 6-வது பணக்கார முதலமைச்சர் ரங்கசாமி என மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவர் எந்த தொழிலும் செய்யவில்லை அப்படி இருக்க எப்படி பணக்கார முதலமைச்சராக வந்தார்? ஊழல் செய்ததால் தான் அவர் பணக்கார முதலமைச்சராக வந்துள்ளார். இந்த ஊழல் ஆட்சியில் புதுச்சேரி மக்கள் தவித்துகொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தூக்கி எறியப்படும். 2026-ம் ஆண்டு திமுக, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்” என்றார்.