பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு- சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல தெற்கு ரயில்வே சார்பில் 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்கள் செல்லும் பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி தாம்பரம் இடையே 12 , 19 , 26 ஆகிய தேதியிலும் 'தாம்பரம் திருநெல்வேலி இடையே 13 , 20 ,27 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் தாம்பரம் - கன்னியாகுமரி இடையே வரும் 13ஆம் தேதியும் மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் இடையே 14ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு 12 ,19 ஆகிய தேதிகளிலும் , மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரலுக்கு 13, 20 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது .
இதேபோல் 10,12, 17 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கும் , 11, 13, 18 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் , மேலும் தாம்பரம் - திருச்சி இடையே மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில் இயக்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்த ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ரயில் நிலைய கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்தனர். முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.