"இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை" : ஈபிஎஸ், அன்புமணி கண்டனம்!!

 
eps

திருச்சி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் நேற்றிரவு ஆடு திருடும் கும்பலை விரட்டி சென்ற போது, அக்கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து தப்பியோடிய கும்பலை பிடிக்க,  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ssi

இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக விரோதிகளால் திருச்சி,நவல்பட்டு காவல்நிலைய SI திரு.பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.  விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.மீண்டும் இந்த விடியா அரசில்  காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 



இதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், " திருச்சியை அடுத்த பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அங்குள்ளவர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரியே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.  இது காவல்துறைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் விடப்பட்ட சவால். இத்தகைய செயல்கள் தடுக்கப்படாவிட்டால்  சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து விடும்!கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!" என்று  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.