சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக நபர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்ததால் அனுமதி மறுப்பு என போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். புத்தாண்டு தினத்திற்கு அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்படுவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.