48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது - கோவை மாணவியின் விபரங்களை வெளியிட்ட குற்றம்
கோவை மாணவியின் தற்கொலை வழக்கில் அம்மாணவியின் அடையாளங்களை பகிரங்கமாக வெளியிட்டதால் நாற்பத்தி எட்டு யூடியூப் சேனல்கள் மீது கோவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவியின் பெயர், மாணவியின் புகைப்படம், அவரது விபரங்கள், அம்மாணவியின் பெற்றோர் புகைப்படங்கள், மாணவி ஆசிரியருடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை பகிரங்கமாக வெளியிட்டதால் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
டெல்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி அப்பெற்றொரின் புகைப்படத்தினை முகம் மறைக்காமல் டுவிட்டரில் வெளியிட்டதால் அவரது டுவிட்டர் பக்கமே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம்.
மாணவியின் இந்த தற்கொலை சம்பவத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதை தொடர்ந்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சின்மயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதாக அம்மாணவி தனது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்த ரெண்டு பேர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த ரெண்டு பேர் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசாரின் விசாரணையில் திணறி வருகின்றார்கள்.
இதற்கிடையில் ஊடகங்கள் மட்டும் யூடியூப் சேனல்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்த விவரங்கள், புகைப்படங்கள், ஆடியோக்கள் பகிரப்பட்டது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கண்டிப்பு காட்டி இருக்கிறது. பாலியல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பதை மீறி மாணவியின் பெயர், படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதையடுத்து கோவை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் விவரங்களை அடையாளப்படுத்திய அதாவது புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப் பட்டிருக்கின்றன. இரண்டு செய்தித்தாள்களும் இந்த வழக்குகளில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
48 யூடியூப் சேனல்கள் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறது. 23 (2 )பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றார்கள்.