மேலும் 22 மீனவர்கள் கைது- அத்துமீறலுக்கு முடிவே இல்லையா?: அன்புமணி ராமதாஸ்
![anbumani ramadoss](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/119f53e937f840a817fb2d5ab4d9932c.jpg)
மேலும் 22 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை அவர்களின் நாட்டுப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடியாது என்பது நன்கு தெரிந்தும், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 61 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 166 விசைபடகுகளை பறிமுதல் செய்திருக்கிறது. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலையளிக்கிறது.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.