"விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி" - ஓபிஎஸ் புகழாரம்!!
மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தில் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம், 2020 ஆம் ஆண்டு விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் மற்றும் 2020ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம் என மூன்று சட்டங்கள் சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டன.
இருப்பினும் இந்த மூன்று சட்டங்கள் மூலம் விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும் என்றும் விவசாயிகளின் நிலங்கள் பறிபோய்விடும் என்ற அச்சம் விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் தெரிவித்து ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை. #FarmLawsRepealed pic.twitter.com/4RLcVJvCFx
— AIADMK (@AIADMKOfficial) November 19, 2021
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை. #FarmLawsRepealed pic.twitter.com/4RLcVJvCFx
— AIADMK (@AIADMKOfficial) November 19, 2021
இந்த சூழ்நிலையில் மேற்படி சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரியவைக்க முடியவில்லை என்று தெரிவித்து , மேற்படி சட்டங்களை திரும்பப் பெறுவதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும் விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பதை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அதிமுக கழகத்தின் சார்பில் பிரதமருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.