“10 நாட்களில் இவ்வளவு கொலைகளா?; தனி கவனம் செலுத்துங்கள் ஸ்டாலின்” – ஓபிஎஸ் எச்சரிக்கை!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். மாறாக, சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகளால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு இடம் இருக்காது. ஏனெனில், அமைதி குன்றிய மாநிலங்களில் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தொழில்முனைவோர்கள் முன்வரமாட்டார்கள்.
மக்களும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும், கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில், கடந்த பத்து நாட்களாக ஆங்காங்கே அன்றாடம் கொலைக் குற்றங்கள் நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவங்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவல்துறையினரையே திருப்பித் தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கும் அமைதியான சூழலை உருவாக்கிடும் வகையில், முதல்வர் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி, சட்டம்- ஒழுங்கைச் சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கவும், கொலைக் குற்றங்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும் அதிகாரிகளுக்குத் தக்க அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.