யாரும் பயப்பட தேவையில்லை..! சீனாவில் அசாதாரணமான சூழல் இல்லை - மத்திய அரசு விளக்கம்..!
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தற்போது பரவி வரும் காய்ச்சல் அடிப்படையில் சீனாவில் சூழல் அசாதாரணமானதாக இல்லை. தற்போதைய பரவலுக்கான காரணம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV. இவை வழக்கமான நோய்க்கிருமிகள் தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் கொண்டு நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும் சீனாவின் நிலைமை குறித்த சரியான நேரத்தில் தகவல்களை பகிருமாறு உலக சுகாதார நிறுவனத்திடமும் கோரப்பட்டுள்ளது. இந்த வைரஸ்கள் ஏற்கனவே இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ளவைதான்.
ஐசிஎம்ஆர் மற்றும் ஐடிஎஸ்பி நெட்வொர்க்குகள் மூலம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச பிரச்சினை (எஸ்ஏஆர்ஐ) ஆகியவற்றுக்கான வலுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இவற்றில் அசாதாரண அதிகரிப்பு எதுவும் இதுவரை இல்லை.
கடந்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படும் பருவகால மாறுபாட்டைத் தவிர, சுவாச நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆயத்த பயிற்சியின் தரவுகள், சுவாச நோய்களின் அதிகரிப்பை சமாளிக்க நாடு நன்கு தயாராக இருப்பதாக காட்டுகிறது” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.