நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது.
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் வளர்க்கப்படும் யானை காந்திமதி. சுமார் 1985 ஆம் ஆண்டு சங்கரன் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானை காந்திமதிக்கு தற்போது வயது 55. கோவிலின் முக்கிய திருவிழாக்களில் சுவாமி சப்பரங்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்டு ஒய்யாமாக நடை போட்டு வலம் வரும். திருவிழா காலங்களில் நான்கு ரத வீடுகளிலும் வலம் வரும் யானை காந்தியை பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கண்டு ரசிப்பார்கள். மேலும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் தேசியக்கொடிக்கு யானை காந்திமதி பிலிரன் சத்தமிட்டு மரியாதை செலுத்துவதை அனைவரும் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் யானை காந்திமதிக்கு 2020 ஆம் ஆண்டு முதல் பின்னங்கால்களில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட தசை பாதிப்பு காரணமாக அதிகமாக நிற்கவோ நடக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து திருவிழா காலங்களில் யானை காந்திமதி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தது. மேலும் அதிகாலை கஜ பூஜைகளும் இரவு பள்ளியறை பூஜைகளுக்கும் கோவிலை சுற்றி வரும். இந்த நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பன்முக கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள், வன கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து வலி நிவாரணிகள், சத்து மருந்துகள், தசை பாதிப்பை சரி செய்யும் மருந்துகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வழங்கி வந்தனர்.
தசை பாதிப்பு அதிகமான காரணத்தினால் கடந்த 40 நாட்களாக யானை மிகவும் அவதியுற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருந்த யானை வலி தாங்காமல் அப்படியே சாய்ந்து படுத்து விட்டது. காலையில் அதை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. எனவே கோவில் நிர்வாகத்தினர் மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளித்தனர். அதன்படி தலைமை மருத்துவர் டாக்டர் முருகன், மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் மனோகரன், மதுரை பன்னோக்கு கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன், மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் மாதேஷ், டாக்டர் செல்வ மாரியப்பன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் யானை காந்திமதியை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் யானையின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் தசைப் பாதிப்பு காரணமாக தொடர்ந்து எழுந்து நிற்க முடியாத யானையை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தினர். சிறிது நேரம் நின்ற யானை சில நிமிடங்களில் கால் வலி காரணமாக மீண்டும் நிற்க முடியாமல் படுத்து விட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் யானையை எழுந்து நிற்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், யானை காந்திமதி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. அதற்கு வயது ஐம்பத்