அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை நிறைவு!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேசிய மகளிர் ஆணைய குழு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்தது. இன்று காலை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணை மாலை வரை சுமார் 7 மணி நேரம் நீடித்தது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா தலைமையிலான குழுவினர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்தினர். மாணவி வன்கொடுமை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருவது குறிப்பிடதக்கது.