அப்படியே தமிழில் எழுதும்போது அர்த்தம் புரியவில்லையா? அதற்கு நீதிபதிகள் சொன்ன யோசனை
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்கப்படுகிறது. அந்தத் திட்டங்கள் மாநிலங்களுக்கு செயல்படுத்தப்படும் போதும் இந்தியில் வைக்கப்பட்ட பெயரையே அப்படியே அந்தந்த மாநிலங்களில் எழுதப்படுகிறது. இதனால் அதன் அர்த்தம் தெரியாமல் அந்தந்த மாநில மக்கள் திணறி வருகிறார்கள். எல்ஐசியின் பாலிசி திட்டங்களுக்கும் இதே நிலை தொடர்கிறது.
இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில்தான் பெயர் வைக்கப்படுகிறது . தமிழகத்தில் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது தமிழக அரசின் அரசாணை ,விளம்பரங்கள், செய்திக்குறிப்பில் இந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்று அப்படியே தமிழில் எழுதினால் தமிழர்களுக்கு அர்த்தம் புரிவதில்லை அதேபோல் எல்ஐசி பாலிசி களுக்கும் இந்தி மொழியில்தான் பெயர் வைக்கிறார்கள் அதையும் தமிழில் அப்படியே எழுதுகிறார்கள் இதனால் அர்த்தம் புரிவதில்லை. அதனால் எதிர்வரும் நாட்களிலாவது அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவர் தாக்கல் செய்திருந்த இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா- வேல்முருகன், ‘’ ஏன் இந்தி மொழியை கற்க கூடாது. ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்வதற்காகத்தான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒன்று. மொழியை மொழியாக கையாளவேண்டும் ’’என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த வழக்கில் நீதிபதிகள் மேலும், ‘’ மனுதாரர் விருப்பப்பட்டால் தமிழ் வளர்ச்சிக் கழகம் , தமிழ் மொழிப்பெயர்ப்பு துறை ஆகிய துறைகளிடம் மத்திய அரசின் திட்டங்களை மொழிபெயர்த்து தருமாறு தெரிந்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து, தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழ் மொழிபெயர்ப்பு துறைகளில் இது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனால் நீதிபதிகள் வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.