“பதவி சுகத்திற்காக அல்ல... உடலில் கடைசி உயிர் இருக்கும் வரை உழைப்பேன்”- மு.க.ஸ்டாலின்

இன்று யார் யாரோ பெரியாரை பற்றி பேசுகிறார்கள், பெரியார் குறித்து விமர்சனம் செய்து பேசுபவர்களை பற்றி நான் பேசி அவர்களுக்கு அடையாளம் காட்ட விரும்பவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 5000 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் என்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுடன் கலந்து கொள்வது என்பது சிறப்பு. அதுவும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு என்றும் மேடை மட்டும் இல்லாமல் இருந்தால் நானும் உங்களைப் போல கைத்தட்டி விசில் அடித்து என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். தமிழர்களுக்கு என்று இருக்கக்கூடிய ஒரு பெருமைக்குரிய விழா என்றால் அது பொங்கல் விழா ஆகும். பொங்கல் பண்டிகையும் திமுகவையும் பிரிக்க முடியாது. திராவிட இயக்கத்தை பொறுத்தவரையில் உரிமையோடு, உற்சாகத்தோடு கொண்டாட கூடிய விழா தான் பொங்கல் விழா என்றும் மற்ற விழாக்களில் மதம், ஜாதி என்று கலந்திருக்கும் ஆனால் பொங்கல் பண்டிகை மட்டும் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உழைப்பை போற்றக்கூடிய ஏழை எளிய மக்கள், விவசாய மக்களின் விழாவாக உள்ளது. தமிழரின் பண்பாட்டை சொல்ல கூடிய வீரமும் விவேகமும் நிறைந்திருக்கக்கூடிய பண்டிகையாக பொங்கல் உள்ளது, அனைவருக்கும் வாழ்த்துக்கள். தந்தை பெரியாரே தமிழர்களுக்கென்று ஒரு விழா இருக்கிறது என்றால் அது பொங்கல் விழா தான் என்று கூறினார். உயிர் பிரியும் வரை தமிழ், தமிழர்களுக்காக பெரியார் போராடினா. இன்று யார் யாரோ பெரியாரை பற்றி பேசுகிறார்கள், பெரியார் குறித்து விமர்சனம் செய்து பேசுபவர்களை பற்றி நான் பேசி அவர்களுக்கு அடையாளம் காட்ட விரும்பவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தவற்றில் பெரும்பான்மையை நிறைவேற்றி உள்ளது. இன்னும் பாக்கி இருக்கும் ஒன்னு ரெண்டும் விரைவில் நிறைவேற்றப்படும். மகளிர் உரிமை திட்டம் இலவச மகளிர் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிவற்றால் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் ஆதரவால் 7வது முறையாக திமுக ஆட்சிக்கு வரும். பதவி சுகத்திற்காக வர வேண்டும் என்று நினைக்க வில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். உடலில் கடைசி உயிர் இருக்கும் வரை உழைப்பேன்” என்றார்.