“வதந்திகளை நம்ப வேண்டாம்”- அமைச்சர் செந்தில் பாலாஜி
பொள்ளாச்சி மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கும் திட்டம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை தொடங்க விவசாய நிலங்களை கையகபடுத்த நில அளவைப் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவல் வந்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கும் திட்டம் இல்லை, விவசாயிகள் வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “சட்டமன்றத்திலோ.. மானிய கோரிக்கையின் போதோ.. சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளது என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலங்கள் எங்கெல்லாம் உள்ளது என்பதை அறிவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் அப்பணிகள் நடைபெற்று வருகிறது சிப்காட் தொழிற்சாலை அமைய உள்ளதாக எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. சில அரசியல் கட்சியினர் அரசின் மீது குறை சொல்வதற்காக இது போன்ற பொய்யான விஷம பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது விவசாயிகள் இதை நம்ப வேண்டாம். அதற்கான முயற்சியும் அரசு செய்யவில்லை . விவசாயிகளின் நலன் காக்கும் முதல்வராக தமிழகம் முதல்வர் செயல்பட்டு வருகிறார். கடந்த அதிமுக பத்தாண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கு இரண்டு லட்சத்து 20 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. மூன்றறை ஆண்டு கால திமுக ஆட்சியில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி முதல்வர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்” என தெரிவித்தார்.