ஜல்லிக்கட்டில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது- அமைச்சர் மூர்த்தி

 
மூர்த்தி

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது என மதுரையில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Image

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையோட்டி ஜனவரி 14 ல் அவனியாபுரத்திலும், 15 ல் பாலமேட்டிலும், 16 ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர், ஜல்லிகட்டு கமிட்டியினர், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில், "ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் 8 அடி உயரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடைபெறும், முன்பதிவுக்கும், களத்தில் வரும் காளைகளின் புகைப்படங்களுக்கு வேறுபாடுகள் உள்ளன, புகைப்படங்கள் மாற்றம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி பெயரில் காளைகளை அறிவிக்க கூடாது, காளை உரிமையாளரின் பெயரை மட்டுமே அறிவிக்க வேண்டும்" எனக் கூறினார்,

Image

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "காளைகளின் கொம்பின் மீது ரப்பர் குப்பிகள் வைக்க கால்நடைத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார், ஆனால், இந்த முறை நடைமுறைக்கு சாத்தியமல்ல, ஒவ்வொரு காளைகளின் கொம்பு வெவ்வேறு விதமாக இருக்கும் ஆகவே ரப்பர் குப்பிகள் வைக்க இயலாது, காளைகளின் கொம்பில் ரப்பர் குப்பிகள் வைப்பதற்கு பதிலாக மாற்று வழியை கால்நடைத்துறை அறிவிக்க வேண்டும்" என கூறினார், 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசுகையில் "காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு நடைபெறும், அரசு சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு மூன்று ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், , கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், அரங்கில் போட்டி நடைபெறக்கூடிய தேதி பின்னர் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படும், சாதி பெயரில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்க கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, அதன்படி கடந்தாண்டு சாதி பெயரில் காளைகள் அவிழ்க்கப்படவில்லை, அதே போல இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படாது" என தெரிவித்தார்.