மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள் - துரைமுருகன் ஆவேசம்!
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகில் எந்த நாட்டில் மது இல்லை. உடல் இச்சை வந்தால் பெற்ற தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக் கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா? திராவிட கழகங்களுக்கு என்ன தத்துவம் இருக்கிறது. கள் இறக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னை மரங்களை வெட்டியவர் பெரியார். மரத்தை வெட்டி சாய்ப்பதுதான் பகுத்தறிவா? அல்லது எங்கள் தோப்பில் கள் இறக்க அனுமதி இல்லை என்று கூறுவது பகுத்தறிவா? தந்தை பெரியாருக்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சமூக நீதிக்காக போராடியது தந்தை பெரியாரா? அல்லது ஆனைமுத்துவா? என கூறினார். சீமானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த நிலையில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது. தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள். பெரியார் பற்றி அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.