“விஜயை முதல்வராக்க கூடாது என்ற உதயநிதியின் முயற்சி தோல்வி! விரைவில் பாஜகவுடன் திமுக கூட்டணி”- மாணிக்கம் தாகூர்
வாக்கு எண்ணிக்கை நடந்த தினம் டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததை தெரிந்து கொண்டுதான் திமுகவிடம் சொல்லாமலேயே காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தோலில் சுமந்த கட்சி காங்கிரஸ், உதயநிதி துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்ததை மறந்து விட்டு நன்றி கெட்டு பேசுகிறார். உதயநிதி அளந்து பேசி இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடந்த தினம் இங்கே டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்தனர். அதன் காரணமாகவே நாங்கள் தவெகவுக்கு கழகத்திற்கு ஆதரவு கொடுத்தோம். வாக்கு எண்ணிக்கை தினமான 4ம் தேதி அன்று தோல்வி அடைந்து கொண்டிருக்கும்போதே பாஜகவின் ஆணைக்கினங்க திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைக்க திட்டமிட்டது. 4ம் தேதி மூன்று மணியளவில் பாஜகவின் முக்கிய தலைவர் அதிமுக மற்றும் திமுக தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
பாஜக அதிமுகவிற்கும் திமுகவிற்கும் கனெக்டிங் கால் போட்டுவிட்டது, இதே தகவலை சி.வி. சண்முகத்திடமும் கேட்கலம். குறிப்பாக விஜயை ஆட்சி அமைக்க விட கூடாது என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருந்தனர். இதையெல்லாம் வெளியில் சொல்லாமலும் அவர்களுடன் செல்லாமலும் இருந்தோம். திமுகவின் அனைத்து கொள்கைகளையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என தவ்வி குதித்தவர் உதயநிதி ஸ்டாலின். விஜயை முதல்வராக விடக்கூடாது என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடைசியில் தோற்று விட்டார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு தர முடிவெடுத்தார்கள். பாஜகவின் இந்த முயற்சிக்கு ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்துள்ளது.இதெல்லாம் வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருந்தோம். பொய் நாடகங்களை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். வெகு விரைவில் பாஜகவின் துணையோடு அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைப்பார்கள்.பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள்” என்றார்.

