”எனக்கும் கூட்டணி மந்திரி சபை வேண்டும் என்ற விருப்பம் உள்ளது” - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு

 
கட்சி அறிவிப்பது பெரிய விஷயம் இல்லை... விஜய்க்கு பட்டால் தான் புரியும்- கார்த்தி சிதம்பரம்

அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் ரியாலிட்டி ஷோவாக தான் நாம் பார்க்க வேண்டும், யாராவது ஒரு ஜோசியர் காலில் காலணி அணியாமல் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வாருங்கள் என்று கூறி இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்


புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில்  தற்போது நடைபெறும் விசாரணைகளை  கடந்து,சமுதாய விழிப்புணர்வு வேண்டும், பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும், பெண்கள் குறித்து நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் நடந்த சம்பவங்களுங்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். போராடுவதற்கும் துண்டு பிரசுரங்கள் அளிப்பதற்கும்  எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும், அனுமதி மறுக்கக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் தான் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது,  விரைவாக விசாரணை செய்து அறிக்கையை அவர்கள் அளிக்க வேண்டும்.அதற்கு முன்னதாக நாம் எந்த முடிவுக்கு வரக்கூடாது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையின் வெளியீடு என்பது கண்டனத்துக்குரியது,அது யார் செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கு பல்கலைக்கழக அதிகாரிகளை பொறுப்பேற்க வேண்டும். இந்த சம்பவத்தில் வேறு ஒரு நபர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது,இது குறித்தும் எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும்.

அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினாலே மாற்றம் வந்துவிடும் என்று நினைக்க முடியாது,மக்கள் மனதில் மாற்றம் வேண்டும். எந்த கட்சி நின்றால் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை இந்தியா கூட்டணி கலந்து பேசி ஆலோசனை செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தி அங்கு வெற்றி பெறச் செய்வோம். எனக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது, எல்லா கட்சிகளின் விருப்பம் கூட அதுதான். இன்னும் தேர்தலுக்கு 16 மாதங்கள் இருக்கு. இப்போது அது குறித்து எதுவும் பேசத் தேவையில்லை அந்த காலகட்டத்தில் அது குறித்து பேசலாம். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரலாம் இதே கூட்டணி நீடிக்கும்.

கட்சி அறிவிப்பது பெரிய விஷயம் இல்லை... விஜய்க்கு பட்டால் தான் புரியும்- கார்த்தி சிதம்பரம்


விஜய் எந்த நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.  மாநாட்டில் ஆளுநருக்கு எதிராக பேசிவிட்டு ஆளுநரை சந்தித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என பல்வேறுவற்றில் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று முதலில் தெரியட்டும். பாமக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குடும்பக்கட்சியால் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனை, அது சுமூகமாக தீர்ந்து விடும். அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் ரியாலிட்டி ஷோவாக தான் நாம் பார்க்க வேண்டும்,  யாராவது ஒரு ஜோசியர் காலில் காலணி அணியாமல் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வாருங்கள் என்று கூறி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.