ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் - முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவியேற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் சஞ்சீவ் பானர்ஜி. இவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி எம் துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று முனீஸ்வரர் நாத் பண்டாரியின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில், முதல்வர் மு.க .ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு , சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.