நானும் வன்னியர்தான்; ஜெய்பீம் என் மனசை புண்படுத்தவில்லை - பிரபல நடிகர் பரபரப்பு வீடியோ
ஜெய் பீம் படத்தில் வன்னிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லி பாமகவினர் கொந்தளித்து உள்ளனர். 5 கோடி இழப்பீடு கேட்டு சட்டப் போராட்டம் நடத்த தயாராகி விட்டனர். சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் பாமக தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவின் படங்களை திரையிடும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.
இதனால் சூர்யா - பாமகவினர் இடையே பெரும் மோதல் போக்கு ஏற்பட்டிருப்பதால் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர் சந்தானம் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி மேலும் ஒரு கருத்தைச் சொல்லி விவகாரத்தை பெரிதாக்கி இருக்கிறார். இந்த நிலையில் அதே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர் அருண்குமார்(தொலைக்காட்சி சீரியல் நடிகர்) சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’ஜெய்பீம் படத்தில் சில காட்சிகள் சில நிகழ்வுகள் வன்னியர்கள் பிற சமூகத்தினரை இழிவுபடுத்துகிற கஷ்டப்படுகிற மாதிரி ஒரு பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை நான் எங்கேயும் எப்போதும் பதிவு செய்ததே இல்லை அப்படி பதிவு பண்ண வேண்டிய அவசியமே இல்லை என்று நினைக்கிற ஆள் நான். நானும் வன்னியர் தான். வன்னியர் என்கிற பார்வையில் ஜெய்பீம் படம் என் மனதை புண்படுத்தியதா என்றால் சத்தியமாக இல்லை. நான் வன்னியராக இருந்தாலும் எல்லா சமூகத்தினருடன் பழகுவேன். எல்லோரும் சமம் என்று நினைப்பவன்.
இந்த படத்தில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அநீதி பார்த்து மனசு வலிக்கிறது. இருளர் இன சிறுபான்மை இனத்தவர்கள் தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்கிறபோது உண்மையிலேயே அதை நினைத்து வெட்கப்பட வேண்டியது நாம் தான். இந்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எந்தவித வசதிகளும் இல்லாமல் வாழ்வதை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டியது.
சூரியா சாரை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். அடுத்தவங்க மனசு புண்படுத்தக் கூடாது அவர்கள் மனசு புண்படும்படி பேசக் கூடாது என்பதைத்தான் ஜெய் பீம் படம் சொல்கிறது.
எல்லா சமூகத்தினருக்கும் சம உரிமை இருக்கிறது. அதை நாம் கொடுக்கவேண்டும் கொடுக்க வேண்டியது இல்லை . அவர் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை விட்டு கொடுத்தாலே போதும். ஒரு நடிகராக ஜெய்பீம் பார்த்தபோது பெருமையாக இருந்தது.
சூர்யா சார் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியால் இருளர் இன மக்களுக்கு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. நம்மளால மத்தவங்களுக்கு நல்லது நடக்கணும் . அப்படிப்பட்ட மனசு உள்ளவரை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை அவருக்கு தொல்லை கொடுக்காம இருக்கணும்.
சூர்யா சார்... எல்லோரும் சமம் என்று என் மனதில் விதைத்து இருக்கிறீர்கள். என் மூலமாக நான் பிறர் மனதில் விதைப்பேன். ஒரு வன்னியர் ஆக சொல்கிறேன். என் சமூகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். சூர்யா சாரை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை . அவருக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும்.
சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பேன் என்று சொல்வதை எல்லாம் விட்டுவிடுங்கள். அதை மறந்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று பேசியிருக்கிறார்.