ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்பி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வந்தது. இந்நிலையில் தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டார். அதில் அரசின் அடுக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளம் நாடுகளைப் போல Gen Z புரட்சி ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக, ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், 34 நிமிடங்களில் சமூக வலைதள பதிவுகளை நீக்கி விட்ட நிலையில், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய எக்ஸ் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை தன் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்கான இந்த மனுவை, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு மாற்றிய நீதிபதி, நவம்பர் 5 ம் தேதி மனுவை, விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நவம்பர் 5 ம் தேதி விசாரணைக்கு வரும்.


