பச்சையப்பன் கல்லூரியை கைப்பற்றுகிறதா தமிழக அரசு?- அமைச்சர் விளக்கம்

 
ச்

பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம், நடவடிக்கை எடுப்போம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், “மத்திய அரசு வெளியிட்டுள்ள யுஜிசி-2025 வரைவு திருத்த நெறிமுறைகளை வெளியிட்டு மாநில கல்வி உரிமைகளை கைவிட வேண்டும். யு.ஜி.சி. திருத்த அறிக்கையை அமல்படுத்த கூடாது. திரும்ப பெற வேண்டும். அடிப்படை கல்வி முதல் உயர்க்கல்வி வரை மத்திய அரசு பல்வேறு இடர்பாடுகளை செய்து வருகிறது. உயர்க்கல்வியில் மத்திய அரசு செய்யும் செயல்களை மக்களிடம் அப்படியே எடுத்து செல்லுங்கள். பல்வேறு‌ மாநிலங்களை கொண்ட இந்தியாவில் கல்வியை அந்தந்த மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையை பறிக்கும் வகையில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகள் உள்ளது. பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. மூலம் கைப்பற்ற மத்திய அரசு நினைக்கிறது.

துணைவேந்தர் நியமனத்தில் இதுவரை உள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் அதிலும் யு.ஜி.சி‌. தலையிட்டுள்ளது. மாநில அரசை கலந்து  ஆலோசிக்காமல் துணைவேந்தரை நியமிக்கும் முடிவு தவறானது. யு.ஜி.சி. மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. கல்வித்துறை சாராத நபர்கள் துணை வேந்தர் பதவிக்கு வரலாம் என்பது முற்றிலும் தவறானது. இது பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை...அதே நேரத்தில் டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம் என்பது ஏற்புடையது அல்ல. தொழில் கல்வியில் இருந்து பொதுக் கல்விக்கு மாணவர்கள் மாறி படிக்கலாம் என்பது தவறானது. ஒரே நேரத்தில் 2 இளங்கலை, 2 முதுகலை படிக்கலாம் என்பது கண்டிக்கத்தக்கது. இது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உயர்க்கல்வியில் தமிழ்நாட்டில் முதலிடம். அகில இந்திய அளவில் உயர்க்கல்வியில் இந்தியா 28 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு 48 சதவீதம்... புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் பட்டங்கள் செல்லாது. அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தமிழக உயர்க்கல்வித்துறை கலந்து கொள்ள முடியாது என சொல்கிறார்கள். யு.ஜி.சி. புதிய நெறிமுறைகளை தமிழ்நாடு போன்று கேரளா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் எதிர்த்துள்ளது.

இதனை கடைசி வரை நாங்கள் எதிர்த்து போராடுவோம்..5-2-2025 தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாநில கல்விக்கொள்கை திட்டப்படி அனைவரும் இதனை எதிர்த்து மெயில் அனுப்ப உள்ளோம். பெரியார் போன்று போராடி நிச்சயமாக போராடி இதில் வெல்வோம். துணைவேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவது யார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆளுநருடைய  நெறிமுறைகளுக்கும் செயல்பாடுகளுக்கும்  ஒரு எல்லை உண்டு அதைத்தாண்டி கல்வித்துறையை சீரழிக்க நினைத்தால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.