அமைச்சர் சேகர்பாபு சொன்ன குட் நியூஸ்..! கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது..?

 
1 1

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த கால ஆட்சியாளர்களால் போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டது. பேருந்துகளின் எண்ணிக்கை, பயனாளிகளின் எண்ணிக்கையை திட்டமிடாமல் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் பணிகளை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பயணிகளுக்கான கழிப்பிடம், ஓட்டுநர்களுக்கான தங்குமிடம், கடைகள், உணவகங்கள், பூங்காக்கள், இணைப்புச் சாலைகள், மழைநீர் வடிகால்கள் என பல்வேறு கட்டமைப்புகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 20 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தென்னக ரயில்வே பொது மேலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்து ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார்.

ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் அழுத்தம் கொடுக்கப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதத்தின் தொடக்கப் பகுதியிலேயே கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறந்து வைத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அழுத்தம் கொடுக்கப்பட உள்ளது. இன்னும் சில தினங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம்" என்றார்.

இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பொங்கலுக்கு முன்னரே மக்களின் பயன்பாட்டுக்கு முதல்முறையாக கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.