திருப்பதி சென்று திருச்சி திரும்பிய 40 பேர்! நடுவழியில் ஏற்பட்ட விபத்து- பலியான உயிர்கள்

திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து சித்தூர் அருகே விபத்துக்குள்ளாகி நான்கு பேர் பலியாகினர்.
திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. சித்தூர் அருகே உள்ள கங்காசாகரத்தில் சித்தூர் - தச்சூர் நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளுக்காக ஒரு டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த டிப்பர் லாரி இடிப்பதை தவிர்க்க முயன்ற தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்றதால் பஸ் தடுப்புச் சுவரில் மோதி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. சித்தூர் மாவட்ட கலெக்டர் சுமித் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டு காயமடைந்தவர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.