இடைத்தேர்தல் - வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. மொத்தம், 46 வேட்பாளர்கள் போட்டி, 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 852 பேலட் யூனிட்டுகள், 284 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 308 VVPAT இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு பேலட் யூனிட்டிலும் வேட்பாளர்கள் சின்னத்துடன் கூடிய பட்டியலை வரிசைப்படி ஊழியர்கள் பொருத்துகின்றனர்.