மத்திய அரசு வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

மத்திய அரசு வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டுமென்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, பல்வேறு தரப்பினர் முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, அவசர அவசரமாக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துக்கள், வக்ஃபு சட்டம் 1995-ஆல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024, வக்ஃபு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், அடக்க ஸ்தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோகும் வாய்ப்புள்ளதாக சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதற்கெதிராக நாடு முழுவதும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்ற இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாயமானதுதான். எனவே, மத்திய அரசு சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.