ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

 
ச்

ராணிப்பேட்டையில் அமைய உள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில்,  வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க  புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதியில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு கடந்த செப்டம்பர் 28ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்தது. இதை பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக 914 கோடியில் தொழிற்சாலை அமைய உள்ளது.  190 ஹெக்டேரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை  மூலம் முதல் கட்டமாக 1650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.