விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- ஐகோர்ட் உத்தரவு

 
eps

வேட்பு மனுவில் தகவலை மறைத்ததான புகார் குறித்து விசாரணையை நடத்த சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

Eps


கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்  எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  பொது செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமி,  தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய  சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,  காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனு,  நீதிபதி வேல்முருகன் முன்  மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல எனவும், வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும், புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

Highcourt

காவல்துறை தரப்பில், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்திரலின் இன்று வழங்கிய தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரை தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீக்கியும் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.