யார் அந்த சார்? காவல் துறை மறைக்கிறது- எடப்பாடி பழனிசாமி

 
EPS

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

EPS

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழகம் என்று சொன்னால் தமிழக மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 23ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் மீறி நுழைந்து பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய மாணவனும் மாணவியும் பேசிக்கொண்டிருக்கும் போது மாணவனை அடித்து உதைத்து அங்கிருந்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதோடு பாலியல் வன்கொடுமை செய்கின்ற செயல்பாட்டினை அவருடைய செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். அதோடு பாலியல் சீண்டல் நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார்...சார்... என்று பேசியதாகவும் அந்த மாணவி புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த சார் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அந்த மாணவி சம்பந்தப்பட்ட காவல்துறையில் புகார் செய்திருக்கிறார், அந்த புகாரில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் காவல் உயர் அதிகாரி,  பாலியல் வன்கொடுமை செய்தது ஒருவர்தான். அவர் ஞானசேகரன் மட்டும் தான் என்று சொல்கிறார். ஆனால் மாணவி புகார் கொடுக்கின்ற பொழுது புகாரிலே அந்த ஞானசேகரன் அவர்கள் சார்...சார்... என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னார் அப்படி என்றால் ’அவர் யாரை சார் சார் என்று கூறினார்?’ என இதுவரை உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கப்படவில்லை. இதை மறைக்கிறார்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

edappadi palanisamy

பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்ற அண்ணா பல்கலைக்கழக  கல்லூரியில் ஞானசேகரன் எப்படி அடிக்கடி அங்கே நுழைந்து வளாகத்தில் சுற்றி திரிந்து இருக்க முடியும்? எந்த பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திலிருந்து மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்கள் அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதனால் பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள். அரசை நம்பித்தான் அந்த பெற்றோர்கள் மாணவிகளை அண்ணா பல்கலைத்தில் படிக்க வைக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் சுமார் 70 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் 56 சிசிடி கேமராக்கள் தான் வேலை செய்வதாகவும் தெரிவிக்கிறார்கள். மற்றவை ஏன் இயங்கவில்லை? இது ஒரு வெக்ககேடான செயல். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதியிலேயே இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமை நடப்பது கண்டிக்கத்தக்கது. அதோடு ஞானசேகரன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 20க்கும்‌ மேற்பட்ட வழக்கில் இருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது, சில வழக்குகள் தீர்ப்பு கிடைத்திருக்கிறது, இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.. இப்படி சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளி எப்படி தங்கு தடை இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாட முடியும்? அதை எப்படி அனுமதித்தார்கள் இப்படிப்பட்ட சரித்தர பதிவேடு குற்றவாளிகளால் இப்படிப்பட்ட நிலைமைகள் தான் ஏற்படும்” என்றார்.