சென்னை ஈசிஆர் விவகாரம் : பெண்களை துரத்தியவர்கள் காரில் திமுக கொடி இருந்தது எப்படி?

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவு பெண் மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு காரில் சென்றிருந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த இரண்டு கார்களில் இருந்த இளைஞர்கள் பெண்களை அச்சுறுத்துவது போல வந்ததால் அங்கிருந்து பெண்கள் தங்கள் காரில் உடனடியாக கிளம்பினர். எனினும் அந்த இளைஞர்கள் திமுக கொடி பொருத்திய கார், இன்னொரு கார் என இரண்டு கார்களில் பின் தொடர்ந்து, அந்த பெண்களின் வீடு வரை துரத்திச் சென்றனர்.
இளைஞர்கள் காரில் துரத்துவதை, மிகுந்த அச்சத்துடன் அந்த பெண்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. மேலும் அந்த பெண்கள் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் கானத்தூர் காவல் நிலைய போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், தடுத்தல், மிரட்டல், சொத்தை சேதபடுத்துவது, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சில இளைஞர்களை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், "கடந்த 25ம் தேதி அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. புகார் வந்த உடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டோம். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து அந்தப் பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை மேற்கொண்டோம்.
காரின் பதிவு எண்கள் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் காரின் உண்மையான உரிமையாளர் அதனை விற்பனை செய்து விட்டதாகவும், பல கைகள் மாறி சந்துரு என்ற இளைஞர் இப்போது அந்த காரை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. மேலும் இன்னொரு கார் ஊட்டியைச் சேர்ந்த ஒரு நபருடையதாகும். அதனை சென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இரண்டு கார்களில் வந்த 7 இளைஞர்கள் பெண்களை மிரட்டியது தெரிய வந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரில் 5 பேர் கல்லூரி மாணவர்கள், ஒருவர் முன்னாள் கல்லூரி மாணவர், அதில் ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்து வந்து படித்து வருகிறார். சந்தோஷ் என்ற முன்னாள் கல்லூரி மாணவர் மூலமாக சந்துருவுடன் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் சந்தோஷ், தமிழ்குமரன், அஸ்வின், விஷ்வேஷ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்துரு என்ற இளைஞர் மீது கடத்தல் மற்றும் மோசடி என இரண்டு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
வழக்கில் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். இளைஞர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் வந்த இளைஞர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை. டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவே அவ்வாறு திமுக கொடியை காரில் கட்டி வந்ததாக இளைஞர்கள் தெரிவித்தனர். மற்றபடி அவர்களுக்கு கட்சியுடன் தொடர்பில்லை,"என்று கூறினர்.