பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவினருக்கும் அருகதையில்லை- துரை வைகோ

 
durai vaiko

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பா.ஜ.க வினருக்கு எந்த அருகதையும் இல்லை என துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம்.. மற்றவர்கள் வெளியே போகலாம் - துரை வைகோ காட்டம்..

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பியும் ம.தி.மு.க முதன்மை செயலாளருமான துரை வைகோ, "அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் திட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தி  தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த தான் அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்காமல் உள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கும் திட்டத்தை அண்ணாமலை விமர்சிப்பது எந்த வகையில் நியாயம். திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூடுதல விரிவாக்க பணிகளில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை அது நடக்கும் என நம்புகிறேன்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச பாஜகவினருக்கும் பாஜக தலைவர்களுக்கும் எந்த அருகதையும் கிடையாது. பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் தான் உள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் அதிகமாக நடைபெறுகிறது.  அங்கு சட்டம் ஒழுங்கு ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை மிகவும் மோசமான செயல் தான். இனி அதுபோல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த நபர் 5 மணி நேரத்திற்குள்ளாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுக முக்கிய நிர்வாகிகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதற்காக அவர் திமுகவை சேர்ந்தவர் என கூறுகிறார்கள் புகைப்படத்தை மட்டும் வைத்து அவர் திமுகக்காரர் என கூற முடியாது.

அதிமுக ஆட்சியிலும் தவறுகள் நடந்தது. ஆனால் மக்கள் போராட்டங்கள் நடத்திய பின்பு தான் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் உடனடியாக தவறு செய்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என்றார்.