தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - அதிர்ச்சி தரும் தகவல்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை ஓய்ந்த பிறகு சாலைகளில் தேங்கி கிடக்கும் வெள்ள நீரினால், நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் மழைக் காலங்களில் அதிகம் பரவும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தவரின் தற்போதைய நிலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை டெங்குவால் 4762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபரில் மட்டும் 813 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனியில் 358 பேரும் , மதுரையில் 239 பேரும், சென்னையில் 219 பேரும் பாதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது டெங்கு பாதிப்பு என்பது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சிபுரம், கடலூர் ,விழுப்புரம் ,சேலம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அதிக அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று முன்தினம் வரை 450 ஆக இருந்த டெங்கு பாதிப்பு தற்போது 532 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பருவ மழைக்காலம் என்பதால் டெங்கு பரவ அதிக வாய்ப்புள்ளது என்பதால் மத்திய, மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்க விடாமல் இருத்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருவதுடன், காய்ச்சல் கண்டறிய முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.