டெல்டாவில் பயிர்சேதம் : முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது அமைச்சர்கள் குழு!!
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேத பாதிப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் டெல்டா பகுதிகளில் கனமழை காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இதனால் மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்து விவரங்களை பார்வையிட்டு முதல்வருக்கு அறிக்கை தர குழு ஒன்று அமைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ,பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஏதுவாக முதலமைச்சருக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அமைச்சர்கள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத விவரங்களை பார்வையிட்ட ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேத விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளித்தனர். டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு பயிர் சேதம், கால்நடை இறப்பு உள்ளிட்டவற்றை ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17,46,000 ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார் 68,652 விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது.