"இந்தி தேசிய மொழி அல்ல..அலுவலக மொழி"- கிரிக்கெட் வீரர் அஸ்வின்
இந்தி தேசிய மொழி அல்ல, அலுவலக மொழி என தண்டலத்தில் உள்ள பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் உரையாற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா , இந்தி ஓகே வா எனக் கேட்டார், தமிழுக்கு மட்டுமே மாணவ, மாணவிகள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர். இந்திக்கு யாரும் ஆதரவு அளிக்காததால், இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று தெரிவித்தார். மேலும் நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்றும், யாராவது என்னை நீ சரிபட்டு வரமாட்ட என்று கூறினால் தான் அதை செய்வேன். கேப்டன் விஷயத்தில் யாரும் என்னை அப்படி கேட்கவில்லை, யாராவது ஒருவர் நீ இந்திய அணியின் கேப்டன் ஆக மாட்டாய் என்று கூறி இருந்தால் கண்டிப்பாக நான் இந்தியனின் கேப்டனாக ஆகியிருப்பேன் என்று தெரிவித்தார்.