"செமஸ்டர் தேர்வை ஆன்லைன் தேர்வாக நடத்திடுக" : முதல்வருக்கு ஈபிஎஸ் கோரிக்கை!!

 
eps

ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்த மாநில அரசு படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தவேண்டும் என்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் படிப்படியாக திறந்து வருகிறது. 

eps

கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆனதால்,  முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால், பண்டிகை காலம், பருவமழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதால் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டர் கூடிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும் எனவே செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள்  கூறுகின்றனர்.

இந்த செமஸ்டருக்கான  சிலபஸ் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும்,  டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற திட்டம் கல்லூரி பேராசிரியருக்கு கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே இன்று செமஸ்டருக்குண்டான பாடங்களை முழுமையாக எங்களுக்கு ஆசிரியர்கள் நடத்தவில்லை என்றும் , மேலும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும், மாணவர்கள் தெரிவித்ததாக இன்றைய நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.  கல்லூரிகளில் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் , பல மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.

eps

கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல மாவட்டங்களில்,  மாணவர்கள் நேரடி தேர்விற்கு தங்களது எதிர்ப்பை காட்டி,  இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அனைத்து கல்லூரி மாணவ மாணவியரும் 2 டேஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்றும்,  அனைத்து மாணவர்களும்,  கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்கள் என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் . அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால் தான் மாணவ செல்வங்கள் முழு திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும். 


இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலித்து போதிய நேரடி வகுப்புகள் நடைபெறும் இந்த செமஸ்டருக்கான பாடத்திட்டம் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும், இந்த செமஸ்டருக்கான  பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்த முடியவில்லை என்பதையும்,  மாதிரி தேர்வுகள் நடைபெறாததையும்,  அனைத்து மாணவர்களும் 2 டோ ஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா என்பதை உறுதி செய்ய இயலாத நிலையையும்,  கருத்தில் கொண்டு நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை  மட்டும் நேரடி தேர்வு நடத்தாமல் ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டுமென்றும் ,மாணவ மாணவியர் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.