கல்லூரி பேருந்து மோதி பள்ளி ஆசிரியை துடிதுடித்து உயிரிழப்பு
கல்லூரி பேருந்து மோதி பள்ளி ஆசிரியை உயிரிழந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் வயலூர் அம்மையப்பன் பிள்ளை நகரைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி. இவர் திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இன்று வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் பள்ளிக்குச் சென்று இருக்கிறார்.
திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே அவர் சென்று கொண்டிருந்த பொழுது குண்டூர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஸ்கூட்டியில் பலமாக மோதி இருக்கிறது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
தலையில் தலைக்கவசம் அணிந்து இருந்தும் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தனியார் கல்லூரி பேருந்து ஓட்டி வந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி ஆசிரியை உயிரிழந்ததை அடுத்து செயின்ட் ஜேம்ஸ் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.