ஆனி திருமஞ்சனம்! சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம்- விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவின் போது, கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமென அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிதம்பரம், நடராஜர் கோவிலில், நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி மறுத்துள்ளதாகவும் ,இதற்கு அனுமதிக்க கோரி தெய்வீக பக்தர்கள் பேரவை மாநிலதுணைத்தலைவர் ஆர். சம்பந்தமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்தார்.
இதையடுத்து, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாததால், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.